ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரி விதிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, திருமண சீசன் போன்ற காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 11-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் (24 காரட்) விலை ரூ.93,353 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.97,730 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.10 லட்சமாக உயரும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்வு காரணமாக ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தங்கத்தின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.12,000 கோடி அதிகரித்துள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி வசம் உள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது.