தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளம் ரோடு மற்றும் மதுரை ரோட்டில் இருந்து நேரு சிலை சிக்னல் நோக்கி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, அரண்மனைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பக்கரையில் வெள்ளம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளகவி, பாம்பர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளக்காடாக மாறியது. நேற்று முன்தினம் அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இன்றும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நீர்வரத்தை பொறுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளுக்கு நீர்வரத்து தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இதேபோல், கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் 86 மி.மீ., வரை மழை பெய்தது. இதையடுத்து 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 155.77 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் 81.34 அடியாக உள்ளது. நீர் திறப்பு 3 கன அடி. நீர் இருப்பு 40.28 மில்லியன் கன அடியாக உள்ளது. ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.43 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 180 கன அடியாக உள்ளது. நீர் திறப்பு 72 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 2955 மில்லியன் கன அடி. உத்தமபாளையம் அருகே 52.55 அடி உயரமுள்ள சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 34.40 அடியாக உள்ளது.
நீர்வரத்து 7 கன அடியாக உள்ளது. தண்ணீர் விடுவது இல்லை. நீர் இருப்பு 31.90 மில்லியன் கன அடியாக உள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.30 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 396 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 1,442 மில்லியன் கன அடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. தண்ணீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 85.48 மில்லியன் கன அடி. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மழை குறைந்துள்ளது.
மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் வருசநாடு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் தொடர் மழையால் மேகமலை, சின்னச்சுருளி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.