சென்னை பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கூட்டு பிஎஸ்சி பட்டப்படிப்பை வழங்குகிறது. இந்த 3 ஆண்டு படிப்பில் சேரும் மாணவர்கள் பொதுவாக முதல் 2 ஆண்டுகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகியவற்றைப் படிப்பார்கள். இறுதி ஆண்டில், இந்தப் பாடங்களில் ஏதேனும் ஒன்றை சிறப்புப் பாடமாக எடுத்துக்கொண்டு விரிவாகப் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பட்டம் வழங்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மட்டுமல்ல, மெல்போர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆன்லைனில் படிப்புகளை நடத்துவார்கள். பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் பட்டம் வழங்கும். இந்தப் பட்டம் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகியவற்றைப் படித்த மாணவர்கள் இந்த சிறப்பு பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேரலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் தேவை. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். வரவிருக்கும் கல்வியாண்டில் (2025-2026) சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூன் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் (www.unom.ac.in) சமர்ப்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ். ஏழுமலை அறிவித்துள்ளார்.