வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ‘ஆபரேஷன் ரைஸிங் லையன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி தளங்கள் இஸ்ரேலின் இலக்காகி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதால், மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில், அமெரிக்க படைகள் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நேரடி உதவி வழங்கி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் மீதான பேச்சுவார்த்தைக்காக ஈரான் முன்வர வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடக்கும் விஷயத்தை ஏற்கனவே அறிந்திருந்ததாகவும், கடந்த காலத்தில் ஈரானை மரணத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் காப்பாற்ற கடுமையாக முயன்றதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு நல்ல அணுசக்தி ஒப்பந்தம் கைகூட வேண்டும் என்ற எண்ணம் தான் தனக்குண்டு என்றும், இப்போது எதுவும் தாமதமாகிவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
போரால் ஏற்படும் நெருக்கடிகளை ஏற்க மறுத்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேலுக்கு முழு ஆதரவளிக்கிறது என்று வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைவதற்கான வாய்ப்பு உள்ளது.