உலகின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரராக திகழும் ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், தனது புதிய திருமணத்தை வெனிஸ் நகரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார். இவர் கடந்த 1993ல் மெக்கன்ஸி ஸ்காட்டை திருமணம் செய்தார், அவருடன் நான்கு குழந்தைகளும் உள்ளனர். ஆனால், இந்த திருமணம் 2019ல் முடிவுக்கு வந்தது. அப்போது, அமேசானில் இருக்கும் அவரது பங்குகளில் 4% பங்குகளை ஸ்காட்டுக்கு பிரித்து வழங்கினார். இதுவே உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக அமைந்தது.
ஜெப் பெசோஸ் தற்போது முன்னாள் ‘டிவி’ நிருபரான லாரன் சான்செஸை காதலிக்கிறார். இவரும் முன்பே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், இருவரின் திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சி 100 கோடி ரூபாய் செலவில், மிகப்பெரிய ஆடம்பரத்துடன் நடைபெற உள்ளது. வெனிஸ் நகரின் அனைத்து நட்சத்திர விடுதிகளும், படகு டாக்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடுகள் வெனிஸ் மக்களில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளன. அவர்கள் கூறுகையில், இதுபோன்ற கோடீஸ்வரர்களின் திருமணங்கள், நகரில் வாழும் பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன. விலைவாசி அதிகரிக்கின்றது, சுற்றுலா தொழிலுக்கு ஏற்படும் மாறுபாடுகள் அவர்களின் இயல்பு வாழ்வை குழப்புகிறது எனக் கூறியுள்ளனர். வெனிஸ் போன்ற இடங்களில், பொதுமக்களின் வாழ்க்கையை மதிக்காமல், பணத்தின் ஆட்சியை நிகழ்த்தும் முயற்சிகளுக்கு இது ஒரு உதாரணம் எனவும் தெரிவித்தனர்.
இதற்காக ‘பெசோசுக்கு இடமில்லை’, ‘வெனிஸ் விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகங்களுடன் பலர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களிலும் இதுபற்றி தீவிர விமர்சனங்கள் எழுந்துள்ளன. பணக்காரர்கள் இச்சமூகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய அதிகாரம் பெற்றவர்களாக மாறியுள்ளனர் என, மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.