நியூயார்க்: ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி அமல்படுத்தப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு 100% வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது:-
அமெரிக்க பொருட்களுக்கு உலக நாடுகள் விதித்துள்ள அதிக வரியால், நமது ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது. அதேபோல், பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50% மற்றும் ஜப்பான் 700% வரிகளை விதிக்கிறது. கனடா வெண்ணெய் மற்றும் சீஸ் மீது சுமார் 300% வரிகளை விதிக்கிறது.

இத்தகைய நாடுகளால் அமெரிக்கா நீண்டகாலமாக கடுமையாக சுரண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் எடுத்துள்ள துணிச்சலான முடிவுகள், அமெரிக்காவுக்கு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளன. நமது ஏற்றுமதியில் அந்நாடுகள் விதிக்கும் அளவுக்கு பரஸ்பர வரிகளை அமல்படுத்த வேண்டிய நேரம் இது. இந்த பரஸ்பர கட்டணத் திட்டம் சுதந்திர தினத்தையொட்டி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு கரோலின் கூறினார்.
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “அமெரிக்க பொருட்களின் மீதான வரியை கணிசமாக குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதை ஏன் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு செய்யவில்லை என்பதுதான் எனது கேள்வி” என்றார்.