வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து அந்த நாடு பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. தற்போது அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பணியாற்றி வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்ததற்குக் காரணம், அங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டம்தான். போராட்டம் வெடித்ததை அடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- பிம்ஸ்டெக் உச்சி மாநாடு தாய்லாந்தில் ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளேன்.
இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் சிறப்பாகவே உள்ளன. இது எதிர்காலத்திலும் தொடரும். இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை நமது நாடுகளுக்கிடையேயான உறவுகள் மிகவும் நெருக்கமானவை. இரு நாடுகளும் ஒன்றையொன்று மிகவும் சார்ந்து உள்ளன. வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம், எனவே எங்களை தனிமைப்படுத்த முடியாது.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே சில மோதல்கள் எழுந்துள்ளன. பொய் பிரசாரம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்குள் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. அந்த தவறான புரிதலை களைந்து அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் போது பிரச்சாரங்களில் பங்கேற்றவர்கள், சமீபத்தில் தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவக்கினர். போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் அமைப்பின் தலைவர் நஹிட் இஸ்லாம் தலைமையில் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கட்சிக்கு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் வாழ்த்து தெரிவித்துள்ளதாக பங்களாதேஷ் இடைக்கால அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, வங்கதேச நாடாளுமன்றத்தின் பொதுத் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இடைக்கால அரசு செய்து வருகிறது. இதற்கிடையில், மாணவர்களால் தொடங்கப்பட்ட புதிய கட்சிக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகர் முஹம்மது யூனுஸ் ஆதரவு அளித்துள்ளதால், தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்று எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.