வான்கூவர்: கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகத்தை செப்டம்பர் 18ஆம் தேதி முற்றுகையிட்டு 12 மணி நேரம் போராட்டம் நடத்தப்போவதாக காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு அமைப்பே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஹர்தீப்சிங் நிஜார் படுகொலை வழக்கில் இந்தியாவின் பங்கை குறித்து விசாரணை நடக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.

அந்த அமைப்பின் அறிக்கையில், இந்தியாவின் புதிய கமிஷனர் தினேஷ் பட்நாயக் முகத்தை குறிவைக்கும் வகையில் சித்தரிக்கப்பட்ட புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது. இதனால் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தில் பதட்டம் நிலவுகிறது.
முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு சுதந்திரம் கிடைத்ததாகவும், இதனால் இந்தியா-கனடா உறவுகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், மீண்டும் பயங்கரவாதிகள் வன்முறைக்கு முயற்சி செய்வது இந்தியா-கனடா உறவில் புதிய சிக்கலை உருவாக்கும் அபாயம் நிலவுகிறது.