புதுடெல்லி: இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா நிதியுதவி செய்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாகவும், மத்திய அரசு இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லி ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் (எஸ்ஆர்சிசி) நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம், இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா நிதி அளிப்பது குறித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள சில தகவல்கள் கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் சில (தேர்தல்) முடிவையோ அல்லது கண்ணோட்டத்தையோ நிலைநிறுத்தும் நோக்கத்தில் இது செய்யப்பட்டதாக தெரிகிறது. நமது அரசு அதை விசாரித்து வருகிறது. உண்மை வெளிவரும் என்று நம்புகிறேன். அமெரிக்க நிதியுதவியைப் பார்த்தீர்களா, கையாண்டீர்களா இல்லையா என்பதல்ல இங்கு கேள்வி. அமெரிக்க நிதி இங்கு அனுமதிக்கப்பட்டது. அமெரிக்க நிதியுதவி இங்கு வரலாற்று ரீதியாக உள்ளது. ஆனால் நல்ல நோக்கங்களுக்காக, நல்ல செயல்பாடுகளுக்காக, அமெரிக்க நிதி இங்கு அனுமதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவிலிருந்து இதுபோன்ற செயல்கள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன. எனவே நிச்சயமாக நாம் அதை விசாரிக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்திருந்தால், தீய நோக்கத்துடன் செயல்பட்டவர்கள் யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். முன்னதாக பிப்ரவரி 20 அன்று, மியாமியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா வழங்கிய $21 மில்லியன் பற்றி சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சி (USAID) யிடம் கேள்வி எழுப்பினார்.
வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட்டதா என்றும் யோசித்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 21 அன்று, “நாட்டில் சில நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்வது பற்றிய அறிக்கைகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. இது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று இந்திய அரசு கூறியது. இந்நிலையில், வெளியுறவுத் துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பின் போது, ”சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் ஏஜென்சிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன” என்றார்.