பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இன்று ‘ஆபரேஷன் ஷீல்ட்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இந்த பயிற்சி இன்று இரவு 8 மணிக்கு துவங்கி 15 நிமிடங்கள் மின்தடை செய்யப்பட்டு, சைரன்கள் ஒலிக்கும். இது, அவசர கால சூழ்நிலையை சமாளிக்க மக்களை தயார் செய்யும் நோக்கத்துடன் நடை பெறுகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் இந்த ஒத்திகை நடைபெறுகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதல் ஏற்பட்டால் பொதுமக்கள் எங்கு செல்ல வேண்டும், மருத்துவமனை எங்கே உள்ளது என்பதுபோன்ற விவரங்கள் பயிற்சியின் போது அறிவுறுத்தப்படுகின்றன.
சைரன் ஒலிக்கும்போது, மக்களுக்கு வெளிச்சங்களை அணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்வெர்ட்டர், சோலார் மற்றும் செல்போன் விளக்குகள் உபயோகப்படுத்த கூடாது. ஜன்னல்களில் திரைச்சீலை வைத்து வெளிச்சம் தெரியாமல் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகள் வழக்கம்போல் செயல்படும். ஒத்திகையின் போது பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் ட்ரோன் மற்றும் வான்வழி தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு திட்டங்களும் பரிசோதிக்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பாதுகாப்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்த பயிற்சி வழங்கப்படும். இந்த ஒத்திகை, மக்கள் பாதுகாப்பு மற்றும் அரசு மீட்பு செயல்பாடுகளுக்கான தயார்தன்மையை உயர்த்தும் முயற்சி ஆகும்.
இது போன்று நாடு முழுவதும் நடைபெறும் பயிற்சிகள், எதிர்பாராத தாக்குதல்களையும் பேரழிவுகளையும் சமாளிக்க மக்களையும் அதிகாரிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க உதவுகின்றன.