ஜப்பான்: இந்தியாவில் E10 ஷின்கான்சென் புல்லட் ரயில்களை தயாரிக்க இந்தியாவும் ஜப்பானும் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கை அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் திட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும், இதன் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 29 அன்று வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக டோக்கியோவை அடைந்து மாநாட்டில் பங்கேற்றார்.

பின்னர், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன், பிரதமர் மோடி, மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலான E5 ஷின்கான்சென்னில் செண்டாய் நகருக்கு பயணம் செய்து, ஜப்பான் மாகாண ஆளுநர்களைச் சந்தித்தார்.
அதே நேரத்தில், ஜப்பானில் இன்னும் சோதனை ஓட்டத்தில் உள்ள, மணிக்கு 400 கிமீ வேகத்தில் இயக்கக்கூடிய E10 ஷின்கான்சென் என்ற புல்லட் ரயில் குறித்தும் அவர் விசாரித்தார். புல்லட் ரயிலை இயக்க பயிற்சி பெற்று வரும் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.