சர்வதேச விண்வெளி மையத்தில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 10 நாள் பயணமாக விண்வெளியில் இருந்த அவர்கள், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதினால் சுமார் 9 மாதங்களாக பூமி திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு எலான் மஸ்க்கிற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், 16ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.
ஆனால், இன்று அதிகாலை 5.20 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து டிராகன் விண்கலத்துடன் சீறி பாயும் பால்கன் 9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், சுனிதாவை பூமிக்கு கொண்டு வரும் க்ரூ-10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, நாளை அதிகாலை மீண்டும் ராக்கெட்டை விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.