அமெரிக்காவின் 47வது அதிபராக ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதிபர் டிரம்ப், மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதேபோல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு குறித்த பொருட்கள் மத்தியிலும், மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தன.
அதன்பின்னர், அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அதேபோல், மெக்சிகோவும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவித்தது. இதன் பின்னர், டிரம்புக்கு, வரி விலக்கு அளிக்க கோரி, கனடா பிரதமர் மற்றும் மெக்சிகோ அதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினர்.
இந்த சூழலில், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு விதித்த புதிய இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து, டிரம்ப் தனது சமூகவலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளார், “மெக்சிகோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாமுடன் நான் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் நட்புரீதியான உரையாடலாக இருந்தது. மெக்சிகோவுக்கு விதித்த இறக்குமதி வரியை ஒரு மாத காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்தவும் நான் ஒப்புக்கொண்டேன்,” என்று கூறினார்.
இதன் பிறகு, டிரம்ப், “பாதுகாப்பான வடக்கு எல்லையை உறுதி செய்வதற்கும், நமது நாட்டிற்குள் வந்து குவிந்து வரும் பென்டானில் போன்ற கொடிய போதைப்பொருட்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் கனடா ஒப்புக்கொண்டுள்ளது. இவை லட்சக்கணக்கான அமெரிக்கர்களைக் கொன்று, நம் நாடு முழுவதும் அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் அழித்து வருகின்றன. அதிபராக, அனைத்து அமெரிக்கர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எனது பொறுப்பு. நான் அதைத்தான் செய்கிறேன்,” என்றார்.
இந்த அறிவிப்புடன், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி தற்போது ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது உலகளாவிய வர்த்தக சந்தையில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.