வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கான ஆயுதம் மற்றும் நிதி உதவியை படிப்படியாக நிறுத்தி வருகிறார். இதையடுத்து கடந்த 18-ம் தேதி சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் நாளில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது அமெரிக்க மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் ரியாத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவற்றில் பங்கேற்க உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நேற்று வாஷிங்டனில் சந்தித்து பேசினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து இரு தலைவர்களும் நீண்ட நேரம் விவாதித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மேக்ரான், “உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “உக்ரைனில் போர் விரைவில் முடிவுக்கு வரும். அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
சரியான நேரத்தில் நான் மாஸ்கோவுக்குச் செல்வேன். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்றுமுன்தினம் கூறும்போது, “போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்க வேண்டும். முதல் கட்டமாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நம்பிக்கையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவிற்கு கனிமங்களை ஏற்றுமதி செய்யவும் தயாராக உள்ளோம்” என்றார்.