மாஸ்கோ: அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ரிச்சர்ட் வுல்ஃப் (83). அமெரிக்காவின் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான அவர் ரஷ்யா டுடே தொலைக்காட்சி சேனலுக்கு ஒரு சிறப்பு நேர்காணலை வழங்கினார். அதில், அவர் கூறியதாவது:-
அமெரிக்கா ஒரு காலத்தில் உலக வல்லரசாக இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பிரிக்ஸ் கூட்டணி ஜி7ஐ விட மிகவும் வலிமையானது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை ஜி7 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. உலகளவில், இந்த 7 நாடுகளின் பொருளாதாரம் 28 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய 10 நாடுகளின் குழுவான பிரிக்ஸின் பொருளாதாரம் 35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரிக்ஸ் உலகின் பொருளாதார மையமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பிரிக்ஸ் கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி, யானையுடன் சண்டையிடும் எலி போன்றது. இந்தியாவுடன் மோதல் அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம், அமெரிக்கா தன்னைத்தானே காலில் சுட்டுக் கொள்கிறது.
சிரியா, லெபனான் போன்ற மத்திய கிழக்கில் உள்ள சிறிய நாடுகளுடன் அமெரிக்கா மோதலாம். இதுபோன்ற சிறிய நாடுகளுடனான மோதல்கள் அமெரிக்காவிற்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் அதே அணுகுமுறையை இந்தியாவுடன் பின்பற்ற முடியாது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. தொடக்கத்திலிருந்தே, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஆழமான நட்பு இருந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்து வருகின்றன. பிரிக்ஸ் கூட்டணி மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தவறுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.