பியாங்யாங்: உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி சந்தை வேகமாக வளர்ந்துவரும் நிலையில், வடகொரிய ஹேக்கர்கள் இணைய திருட்டின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளனர். வடகொரியா அரசுடன் தொடர்புடைய “லாசரஸ் குரூப்” எனப்படும் ஹேக்கர் குழு, கிரிப்டோ நிறுவனங்களின் இணைய தளங்களை குறிவைத்து பல்வேறு நாடுகளில் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் வெளியிட்ட தகவலின்படி, இந்த குழு திருடிய கிரிப்டோ நாணயங்கள், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டங்களுக்கு நேரடி நிதியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரியில், துபாயை தளமாகக் கொண்ட “பைபிட்” நிறுவனத்திலிருந்து மட்டும் 13,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இதுவரை 30க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களில் ஈடுபட்ட லாசரஸ் குழு, மொத்தம் 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ நாணயங்களை திருடியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டின் அளவை விட மூன்று மடங்கு அதிகம். 2017 முதல், அவர்கள் சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் மேலான நாணயங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
வடகொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 13 சதவீதம் வரை இந்த திருடப்பட்ட நாணயங்கள் பங்களிக்கும் என்ற மதிப்பீடு வெளியாகியுள்ளது. இதனால் உலக நிதி பாதுகாப்பில் பெரும் அச்சம் நிலவுகிறது. பல நாடுகள் தற்போது கிரிப்டோ பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகின்றன.