புது டெல்லி: ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதலை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் ராணுவத்தின் துணிச்சலை வெளிப்படுத்தவும், அதன் சாதனைகளைப் பட்டியலிடவும் பாஜக முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் யாத்திரையின் போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் பாஜக தயாராகி வருகிறது. தேசியக் கொடிகளுடன் பாஜக நடத்தும் இந்த யாத்திரையின் மூலம், கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் விளக்க கருத்தரங்குகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களின் இந்தக் கொடி அணிவகுப்பு மே 13 முதல் 23 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தப் பேரணியின் பிரச்சாரத்தின் போது, பல்வேறு நிலைகளில் உள்ள பாஜக தொண்டர்கள் பொதுமக்களுடன் நேரடியாகப் பேசுவார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. பின்னர், திங்கட்கிழமை, கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா பொதுச் செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மனோகர் லால் கட்டார், கிரண் ரிஜிஜு, பூபேந்திர யாதவ், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கொடி அணிவகுப்புக்கான உத்தி வகுக்கப்பட்டது, இன்று பேரணி நடைபெறுகிறது. பாஜக தேசிய செயற்குழுவில் உள்ள ஒருவர், ‘இந்து தமிழ் திசை’ வலைத்தளத்திடம் கூறுகையில், “திடீர் போர் நிறுத்த அறிவிப்பு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூலம் உலகிற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விதம் ஆகியவற்றால் கட்சியின் முக்கிய வாக்கு வங்கிகள் ஏமாற்றமடைந்துள்ளன. இந்த ஏமாற்றத்தை நீக்குவது எங்கள் கட்சிக்கு ஒரு பெரிய சவாலாகும். நேற்று பிரதமர் நாட்டுக்கு ஆற்றிய உரையில் நிலைமை மாறும் என்றும் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. போர் நிறுத்த முடிவில் எந்த மூன்றாம் தரப்பினரும் ஈடுபடவில்லை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்றும் பாஜக அரசு கூறியுள்ளது.
இவற்றை பொதுமக்களுக்கு முன் எடுத்துரைப்பதே இந்த கொடி அணிவகுப்பு. மத்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவும் விமர்சனங்களையும் நாங்கள் நிறுத்துவோம்.” எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நேரடியான மற்றும் வலுவான பதிலடி கொடுப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம். இந்த தாக்குதல் நடவடிக்கையில், இந்திய ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றதன் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றது. பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கும் பொருத்தமான பதில் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இந்தியா பாகிஸ்தானுடன் போர் செய்யப் போகிறது என்று பரவலாக நம்பப்பட்டது. இதற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட திடீர் போர் நிறுத்தம் சிலருக்கு ஏமாற்றமாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.