சென்னை: நமது குலசாமிங்க அவரு… ராமதாஸ் ஐயா நமது குலசாமி, குல தெய்வம் என்று உருக்கமாக பேசிய அன்புமணி கண்ணீர் விட்டார்.
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று 2-வது நாளாக பா.ம.க. மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர்களிடையே பேசிய அன்புமணி கூறியதாவது:-
நமது கட்சியில் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர் இருந்தாலும் உண்மையாக இருப்பவர்கள் வேண்டும். பா.ம.க.வை தோற்றுவித்த ராமதாஸ் ஐயா நமது குலசாமி, குல தெய்வம். ராமதாசின் வழிகாட்டுதல்படி கொள்கைகளை கடைபிடித்து வெற்றிப்பெற வேண்டும்.
பா.ம.க.வை மேலும் பலப்படுத்த கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சிறுசிறு குழப்பங்கள் எல்லாம் வருகிறது, அது அனைத்தையும் நான் சரிப்படுத்தி விடுவேன். நிர்வாகிகள் யாரையும் மாற்ற தேவையில்லை, குழப்பங்களை நான் பார்த்து கொள்கிறேன். பா.ம.க. யாருடைய சொத்தும் இல்லை, தொண்டர்களின் கட்சி தான்.
தமிழகத்தை பலர் ஆண்டிருக்கலாம், இனி நமது காலம். நீங்கள் எனது உடன் பணியாளர்கள், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். உங்களை யாராலும் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் ஒன்றும் செய்ய முடியாது.
தமிழகத்தில் பா.ம.க.விற்கு இருக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழக மக்களின் உரிமை மீட்புக்காக ஒரு நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். நான்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று இல்லை, கட்சியின் வேலைகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வன்னியர் சங்க மாநாட்டிற்கு வந்த 3-ல் ஒரு பங்கு பேர் திடலுக்கு வர முடியவில்லை. வன்னியர் சங்க மாநாட்டால் அரசாங்கமே ஆடி போய் உள்ளது. இவர்கள் அவர்கள் என்று இல்லை, அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். பா.ம.க. ஆட்சியமைக்க வேண்டும் என்ற காடுவெட்டி குருவின் கனவை நிறைவேற்றுவோம். உங்கள் அண்ணனாக, தம்பியாக நான் உள்ளேன், தைரியமாக வேலை பாருங்கள்.
தற்போது கட்சியில் சுதந்திரமாக செயல்பட முடிகிறது, எனது சொந்தங்கள் நீங்கள் என்னை புரிந்து கொண்டீர்கள். அது போதும். என் மனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது என்று கூறி கண்கலங்கினார்.