புது டெல்லி: லடாக்கில் அரசு வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மலைவாழ் மேம்பாட்டு கவுன்சில்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக – ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என பிரிக்கப்பட்டது. அப்போதிருந்து, லடாக் மக்கள் தங்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்திற்கான அரசியலமைப்பு பாதுகாப்புக்காக போராடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு நேற்று புதிய இடஒதுக்கீடு, குடியிருப்பு விதிகளில் திருத்தம் மற்றும் பெண்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, லடாக்கில் உள்ள யூனியன் பிரதேச வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. லடாக்கில் 15 ஆண்டுகள் வசித்து வருபவர்கள் அல்லது 7 ஆண்டுகள் படித்து 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்.
மேலும், லடாக்கில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்களின் சந்ததியினர் இதற்குத் தகுதி பெறுவார்கள். லடாக்கில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு 10%-ல் தொடர்கிறது. லடாக்கில் உள்ள தன்னாட்சி மலைவாழ் மேம்பாட்டு கவுன்சில்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் சுழற்சி அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.