சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் செல்கின்றன, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, தனியார் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கும், 50 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் உள்ளன. மொத்தம், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதேபோல், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் 1,900 இடங்கள் உள்ளன.

இதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சுகாதாரத் துறை புதிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்காததால், கடந்த ஆண்டு கிடைத்த 11,350 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு சேர்க்கை நடைபெறும். இந்த சூழ்நிலையில், 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.
இதுவரை, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்ப காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைவதால், தகுதியான மாணவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.