நாகர்கோவில்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று கேட்டு ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய், 2-வது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி எதிர்கொள்ளும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமா? அல்லது யாருடனாவது கூட்டணி அமைத்து களம் இறங்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று த.வெ.க. கட்சியினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் நகரில் பல இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. அதில், 2026-ல் மக்கள் விரும்பும் முதல்வராக பதவியேற்க இருக்கும் எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அழைக்கின்றோம்.
நமது கழகத்தின் வெற்றி வாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பமாகட்டும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.