புதுடில்லி: முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, ரூ.17 ஆயிரம் கோடி கடன் மோசடி சம்பவத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் 9 மணி நேரம் தீவிரமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து கடன் பெற்று, அதை மோசடி செய்வதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் அவருடைய வீடு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சேகரித்தனர்.

இந்த விசாரணையின் போது, கடன் போலி நிறுவனங்களுக்கு திருப்பப்பட்டதா, அரசியல் கட்சிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாரா என்ற கேள்விகள் அனில் அம்பானியிடம் எழுப்பப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தெரியாது என பதிலளித்தார்.
விசாரணையின் போது அவருடன் வழக்கறிஞர் இருக்க அனுமதிக்கப்படவில்லை, மேலும் முழு விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டிருக்கும் என சந்தேகிக்கின்றனர்.