வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி விதிப்பு விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்றும், உக்ரைன் பிரச்சினை ஒரு ஐரோப்பிய பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாமை குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஒரு நல்லிணக்கம் ஏற்பட, இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் அதில் ஆர்வம் காட்ட வேண்டும். புடின் ஆர்வமாக இருக்கும்போது, ஜெலென்ஸ்கி இல்லை. ஜெலென்ஸ்கி ஆர்வமாக இருக்கும்போது, புடின் இல்லை. இப்போது ஜெலென்ஸ்கி போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார். ஆனால், புடின்… கேள்விக்குறி. புடினுடன் எனக்கு எப்போதும் ஒரு சிறந்த உறவு இருந்தது. நான் தீர்க்காத ஒரே போர் இதுதான். வங்கிகளுக்கு எதிரான தடைகள், எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிக வரி, போர்களை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற விஷயங்களை நான் ஏற்கனவே செய்துள்ளேன்.

நான் நிறைய செய்துள்ளேன். நான் ஏழு போர்களை முடித்தேன். பாகிஸ்தான்-இந்தியா உட்பட பலவற்றை முடிவுக்குக் கொண்டு வந்தேன். சில தீர்க்க முடியாதவை. குறிப்பாக காங்கோவிற்கும் ருவாண்டாவிற்கும் இடையிலான மோதல். நான் அதை முடிவுக்குக் கொண்டு வந்தேன். லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற தீர்க்க முடியாத போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன், ”என்று அவர் கூறினார்.
இந்தியாவுடனான உறவுகள் குறித்து பேசிய டிரம்ப், “இந்தியா அவர்களின் (ரஷ்யாவின்) மிகப்பெரிய வாடிக்கையாளர். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 50% வரி விதித்தேன். இது உண்மையில் ஒரு பெரிய விஷயம். இது இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்துகிறது. இந்த (உக்ரைன்-ரஷ்யா போர்) நமது பிரச்சினையை விட ஐரோப்பிய பிரச்சினையாகும்” என்றார்.