மதுரை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாளின் உருவப்படத்தை அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயாரும் போஸ் தேவரின் மனைவியுமான மீனாள் அம்மாள், ‘அம்மா அறக்கட்டளை’யின் பொருளாளராக இருந்தார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மீனாள் அம்மாள், கடந்த 8-ம் தேதி காலமானார்.
இதையடுத்து, மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா நினைவு வளாகத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா நினைவு வளாகத்தில் மீனாள் அம்மாளின் உருவப்பட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு மீனாள் அம்மாளின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அவரது உருவப்படத்தில் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வேலம்மாள் கல்விக் குழுத் தலைவர் முத்துராமலிங்கம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் கே. ராஜு, ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் பா. சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், பார்வர்டு பிளாக் நிர்வாகி கதிரவன், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.பி. உதயகுமார், ஆர்.பி. யோகீஸ்வரன், எம். மாரீஸ்வரி மற்றும் பலர் செய்திருந்தனர்.