சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) ஒரு சில இடங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இன்று (ஆகஸ்ட் 5) மாறுப்பட்ட மேற்குக் காற்று காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 – 40 கிமீ) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஆக.6), தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 – 40 கி.மீ.) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, தென்கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 9ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் வேகமான மற்றும் இடைப்பட்ட காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.