ஆடுதுறை: திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை அரசு பள்ளியில், தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவசர அவசரமாக தற்போது சிறிய தடுப்புசுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் .
இந்நிலையில், பள்ளி மேம்பாட்டு மானியத்தில், 34 லட்சம் மதிப்பீட்டில், புதிய சுகாதார வளாகம் கட்டி நேற்று முன்தினம் மாணவிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
அதில் கழிவறை குறுக்கே தடுப்புகள் இன்றி கட்டப்பட்டு இருந்ததை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகி பேசு பொருளாக மாறியது.
இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்பேரில் தடுப்புகள் இன்றி கட்டி திறக்கப்பட்ட கழிவறையில் தற்போது சிறிய அளவிலான தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்ட வருகின்றன.