தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழையால்அறுவடைக்கு தயாரான குறுவை நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை பருவ நெற் பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேட்டூர் அணை நிகழாண்டு உரிய காலமான ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 1.99 லட்சம் ஏக்கரில் நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இதில், ஏறத்தாழ 1.65 லட்சம் ஏக்கரில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் ஒரத்தநாடு, தஞ்சாவூர், அம்மாபேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் நெற் பயிர்கள் உள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை பிற்பகல் இடைவெளி விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது. இதனால், மாவட்டத்தில் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள குறுவை பருவ நெற் பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் கிடக்கின்றன.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஏறத்தாழ 300 ஏக்கரில் குறுவை பருவ நெற் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது என்பது தெரிய வந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பலத்த மழை பெய்து வருவதால், பாதிக்கப்பட்ட பயிர்களின் பரப்பளவு இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மழை பெய்ததால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இதை இனிமேல் அறுவடை செய்தாலும், விவசாயிகளுக்கு நட்டம்தான் கிடைக்கும். சாய்ந்து கிடக்கும் வயலில் தண்ணீர் வடிந்த பிறகுதான் அறுவடை செய்ய முடியும். அதுவும் நிலம் ஈரமாக இருக்கும்போது, அறுவடை இயந்திரத்துக்கான வாடகை அதிகமாக கொடுக்கும் நிலை ஏற்படும். மேலும், மகசூல் இழப்பு அதிகமாகும்போது விவசாயிகள் நட்டத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.