கொழும்பு: நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஆயுத படைகளுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆகஸ்ட் 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கும் முக்கியமான காலகட்டத்தில் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளை ஒழுங்குபடுத்துகிறது.
கொழும்பு, கம்பகா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களில் பொது ஒழுங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கண்காணிக்கும் உத்தரவுக்கு உட்பட்டது.
அத்துடன் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கையை ஆயுதப்படையினர் மேற்கொள்வர்