புதுடில்லி: மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் இன்று ( ஆக.,30) பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய மத்திய அமைச்சரவை செயலாளரான ராஜிவ் கவுபா 1982ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமைச்சரவை செயலராக பணியாற்றி வருகிறார். இவரது பதவிகாலம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருந்த நிலையில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு இன்றுடன் பணி நிறைவு பெற்றார்.
இதையடுத்து புதிய செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியான டி.வி. சோமநாதன் கடந்த 10-ம் தேதி அன்று நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர் 1987 ம் ஆண்டு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ்., கேடர் ஆவார். முன்னதாக பிரதமர் அலுவலக இணை செயலர், கூடுதல் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து வந்தார். தற்போது மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.