தஞ்சாவூர்: தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, ஆட்சியர் தெரிவித்தது:
இந்தக் கண்காட்சி தொடர்ந்து அக்டோபர் 25 ஆம் தேதி வரை (ஞாயிறு உள்பட) நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில், களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள், அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகர் செட், குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தர்பார் செட், மைசூர் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், கருட சேவை செட், வைகுண்டம் செட், துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு செட் போன்ற செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், ராஜஸ்தான், கொல்கத்தா, புணே, புதுதில்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கொல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.