திருவண்ணாமலை: இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, வரும் 13-ம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவிற்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- டிச., 13, 14, 15 மெமு எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே இயக்கப்படும். முதல் ரயில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து 12-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

பின்னர் 13-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் சந்திப்புக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றடையும். இதேபோல், விழுப்புரம் சந்திப்பில் இருந்து 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.25 மணிக்கு மற்றொரு ரயில் புறப்பட்டு, 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். பின்னர் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் 2.15 மணிக்கு சென்றடையும். இந்த அட்டவணையில் வரும் 15-ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல் திருச்சியில் இருந்து 13-ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக மதியம் 1.25 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும். அதைத் தொடர்ந்து, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் ரயில் நள்ளிரவு 12.25 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு 14-ம் தேதி காலை 7.20 மணிக்கு திருச்சி சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.