புதுடில்லி: ”ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வரலாற்றை அழிக்க முயற்சி செய்கிறது,” என டில்லியில் தி.மு.க., சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் யு.ஜி.சி., வரைவு விதிகளை திருத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தி.மு.க.,. இந்த ஆக்கப்பூர்வ ஆர்ப்பாட்டம் டில்லியில் ஜந்தர் மந்தரில் நடந்தது. இதில் எம்.பி., கனிமொழி மற்றும் தி.மு.க., எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்., வி.சி.க., கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக மானிய குழு, வரைவு விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராகுல், ”நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றை மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது. இதுதான் துவக்கப்புள்ளி. அவர்கள் ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி என்ற கொள்கையை அமல்படுத்த விரும்புகிறார்கள். இதனால் அரசியல்சாசனத்தை தாக்குகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் தங்களது கல்வி முறையை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இது போன்ற பல போராட்டங்கள் நடத்த வேண்டும். அந்த அமைப்பால் நமது அரசியலமைப்பு, மாநிலங்கள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை மாற்ற முடியாது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்,” என்று கூறினார்.
இவ்வாறு, அகிலேஷ் யாதவ், ”மத்திய அரசு மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொள்ள விரும்புகிறது. அரசியல்வாதிகள் தொழிலதிபர்களின் சேவகர்களாக இருக்க விரும்புகின்றனர். புதிய கல்விக் கொள்கைக்கு நான் எதிரானவன். பா.ஜ.,விற்கு எதிராகவும் நான் இருக்கின்றேன்,” என அவர் பேசியுள்ளார்.