நாமக்கல்: ஆந்திராவின் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 3 மாதங்களாக கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 1,000-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க, கோழிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணை நுழைவாயிலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு அதன் வழியாக வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. நாமக்கல் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் உயிர் பாதுகாப்பு முறைகள் காரணமாக பறவை காய்ச்சல் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. இருப்பினும் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.