சமீபத்திய டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் திட்டம். தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மகிளா சம்ருதி யோஜனா திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது.
பா.ஜ., எம்.பி., மனோஜ் திவாரி கூறுகையில், “டெல்லியில் உள்ள ஏழை பெண்களுக்கு, மாதம், 2,500 ரூபாய் வழங்கப்படும் என, டெல்லி தேர்தலின் போது, வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில், இத்திட்டத்துக்கான பதிவு, மார்ச், 8-ல் துவங்குகிறது. இதற்கான பயனாளிகள் பட்டியல், ஏற்கனவே தயார் செய்யப்பட்டு விட்டது. ஒன்றரை மாதத்தில், பதிவு செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறுகையில், “பாஜக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி மட்டுமின்றி, ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டர், தீபாவளி, ஹோலி பண்டிகையின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இதற்கு முதல்வர் ரேகா குப்தா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.