சென்னை: சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்களில் பஞ்ச கவ்வியத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு. பஞ்சகவ்யம் என்பது -. பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம் , கோமியம் , பால் , நெய் ,தயிர் ஆகியவற்றை சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே ஆகும்.
பசும் பாலில் சந்திரனும் ,பசுவின் தயிரில் வாயு பகவானும்,கோமயத்தில் வருண பகவானும்,பசும் சாணத்தில் அக்னிதேவனும் ,நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் என்கிறது நமது சாஸ்திரம்.
நமது இந்து மத இறை வழிபாட்டின்போது முக்கிய பூஜைத் பொருளாக திகழும் பஞ்ச கவ்யத்தால் இறைவனை அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் அளவில்லாதது. பசும்பால் அபிஷேகம் ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தியையும், பசுந்தயிர் அபிஷேகம் பாரம்பரிய விருத்தியையும்,பசும்நெய் அபிஷேகம் மோட்ச பதத்தையும் கொடுக்க வல்லது.
கோசலம் தீட்டு நீக்கம் செய்வதற்கும்,கோமலம் ஒரு நல்ல கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இறைவன் வீற்றிருக்கும் கோவில் கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் தினமும் நடக்கும் அபிஷேக ஆராதனைகளால் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன.
கோவில்களின் பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒளி படிய வாய்ப்பு இருப்பதில்லை. குளிர்ச்சி, சூரிய ஒளி இல்லாதது , இருட்டு போன்ற காரணங்களால் ,ஸ்வாமி சிலைகளின் இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் . இவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு உண்டு.
பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் தெய்வீக ஆற்றல் இன்னும் அதிகமாகின்றது என்பதும் நம்பிக்கையாகும். இறை அபிஷேகத்திற்கு மட்டுமின்றி பஞ்சகவ்வியத்திற்கு இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் தனி இடம் உண்டு. பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர் என்பது ஐதீகம்.