தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69-வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ். முருகன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மறைந்த நடிகர்கள் டெல்லி கணேஷ், சரோஜா தேவி, ராஜேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலருக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூத்த நடிகை எம்.என். ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற்ற ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இதில், நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக ஊடகங்களில் தவறான மற்றும் அவதூறான தகவல்களைப் பதிவிடுபவர்கள், அவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால், அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் மற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கடந்த 67-வது பொதுக்குழுவில், புதிய சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு வங்கியில் இருந்து ரூ.40 கோடி வரை கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது, வங்கிக் கடன் தொகை ரூ.25 கோடி மட்டுமே, அதற்கான வட்டி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, கட்டிடத்தின் உள்கட்டமைப்பில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வடிவமைப்பை உருவாக்க ரூ.10 கோடி வரை தேவைப்படுவதால், வங்கியில் இருந்து கூடுதல் கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.