சென்னை: ஹீரோயின் இல்லாத படத்தில் நடிகர் ஜெய் நடிக்கிறார் என்று அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ப்ரிட்டோ மைக்கேல் இசையமைக்கிறார்.
எஸ்.எஸ்.டி. ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார்.
சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் கதாநாயகி மற்றும் பாடல்கள் எதுவும் இல்லை என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். கதைக்கு தேவைப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற மே மாத வாக்கில் தொடங்குகிறது. இத்திரைப்படத்தை எஸ்.எஸ்.டி. ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ப்ரிட்டோ மைக்கேல் இசையமைக்கிறார். ஸ்ரீ சரவணன் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நடக்க இருக்கிறது. இந்தப் படம் குறித்த் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிகிறது.