‘த்ரிஷ்யம் 3’ படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் ‘த்ரிஷ்யம் 3’ படத்தை உறுதி செய்துள்ளார். “கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது. ‘த்ரிஷ்யம் 3’ உறுதியானது,” என்று பதிவிட்டு, ஜீத்து ஜோசப் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோருடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார். ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் இணைந்து தயாரிக்கும் படம் ‘த்ரிஷ்யம்’. அதைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 2’ வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்தக் கதையின் இறுதிப் பகுதி ‘த்ரிஷ்யம் 3’ என்று சில மாதங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. த்ரிஷ்யம் படத்தின் கதை ஒரு சாதாரண மனிதன் தன் குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைப் பற்றியது. மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் மற்றும் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய படங்கள் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட உள்ளன. 2013-ம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கைத் தயாரித்த பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்கப் போகிறது. த்ரிஷ்யம் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படுவதால், 10 நாடுகளின் மொழிகளில் ‘த்ரிஷ்யம்’ படங்களை ரீமேக் செய்ய பனோரமா முடிவு செய்துள்ளது.