சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் கோலியை முதல் முறையாக சந்தித்தது குறித்து நடிகர் சிம்பு என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்.சி.பி. அணி டாப் 4-க்குள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், “சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற ‘நீ சிங்கம்தான்’ பாடலை விரும்பிக் கேட்கிறேன்” என்று விராட் கோலி தெரிவித்தார்.
அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி,”தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், நீ சிங்கம் தான் பாடலை விரும்பிக் கேட்கிறேன்” என்று தெரிவித்தார். இந்த வீடியோவை ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதனையடுத்து இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிம்பு, “நீ சிங்கம் தான்” என்று விராட் கோலிக்கு புகழாரம் சூட்டினார். இந்நிலையில் முதல்முறையாக கோலியை சந்தித்தது குறித்து சிம்பு பேசியுள்ளார். ‘தக் லைப்’ படத்தின் புரமோசனின்போது பேசிய சிம்பு, “கோலி தான் அடுத்த சச்சின் என நான் முன்பே கணித்தேன். அதுபோலவே அவர் பெரிய ஆளாக வந்தார். ஒருநாள் நேரில் சந்தித்தபோது அவரிடம் ஹாய் சொன்னேன். நீங்கள் யார் என என்னிடம் அவர் கேட்டார். சிம்பு என்றேன்.
தெரியாது என்றார். அப்போது ‘ஒருநாள் என்னை யார்னு தெரியவரும். அப்போ பாத்துக்கிறேனு’ நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் கோலிக்கு ‘நீ சிங்கம் தான்’ பாடல் பிடிக்கும் என்றார். அதில் தான் நடித்திருப்பது அவருக்கு தெரியுமா? என்று சொல்ல முடியாது. ஆனால் அதுவே எனக்கு வெற்றி தான்” என்று தெரிவித்தார்.