சென்னை : ஒளரங்கசீப்பை அறைவேன் என்று ரெட்ரோ விழாவில் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முகலாய மன்னரான ஒளரங்கசீப் மற்றும் ஆங்கிலேயரை அறைவேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா சூர்யாவின் நடிப்பையும் அவரால் ஈர்க்கப்பட்டதையும் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது, நீங்கள் கடந்த காலத்திற்குச் செல்ல விரும்பினால் யாரைச் சந்திப்பீர்கள், என்ன செய்வீர்கள் என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, `நான் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சாவா திரைப்படத்தை பார்த்தேன். அதில் ஒளரங்கசீப்பின் செயல்பாடுகளை பார்த்தபோது அதிருப்தி இருந்தது. எனக்கு மட்டும் கடந்த காலத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலேயர் காலத்திற்குச் சென்று பிரிட்டிஷ்காரர்களுக்கு இரண்டு அறை கொடுக்க வேண்டும்.
அது மட்டுமல்ல ஒளரங்கசீப்புக்கும் இரண்டு அறை கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு எனக்கு கோபம் இருக்கிறது. எனக்கு கடந்த காலத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் என்னிடம் இது போன்று அறை வாங்குவதற்கான ஆள்களின் பட்டியல் நிறைய இருக்கிறது’’ எனக் குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய அவர், “பயங்கரவாதிகளுக்கு மூளை இல்லை. அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டியது அவசியம். பாகிஸ்தானால், தன் நாட்டுக்குள் நடக்கும் சொந்த பிரச்னையைக்கூட கையாள முடியாது. ஆனால் காஷ்மீருக்காக இந்தியாவை தாக்க மட்டும் துணிச்சல் உள்ளது.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தானியர்களே தங்கள் அரசாங்கத்தால் சலிப்படைந்து கிளர்ச்சி செய்வார்கள்’’ என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.