ஐதராபாத்: தயாரிப்பாளராக இருக்கும்போது, பட தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்தை பற்றியும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதில் நம்பவே முடியாத அளவுக்கு ஒரு திருப்தி இருக்கிறது என்ற நடிகை சமந்தா தெரிவித்தார்.
கடந்த 2023ல் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சமந்தா, ‘இந்த தளத்தின் மூலமாக சமூக கட்டமைப்பில் இருக்கும் மிக வலிமையானதும், சிக்கலானதுமான கதைகள் குறித்து பேசலாம்’ என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் சமந்தா தயாரித்துள்ள ‘சுபம்’ என்ற தெலுங்கு படம் வரும் 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
தயாரிப்பாளரான அனுபவம் குறித்து சமந்தா கூறியதாவது: வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்துக்கும் அதிக ரிஸ்க் எடுக்காமல், அர்த்தமுள்ள எந்தவொரு மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்கவே முடியாது. எப்போதுமே நான் அதிகமான ரிஸ்க் எடுப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியது இல்லை. நான் எடுத்த ரிஸ்க் பெரும்பாலும் எனக்கு நல்ல பலனையே அளித்துள்ளது.
15 ஆண்டு கால திரைப்படத்துறையில் நான் கற்றுக்கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில், நான் சொல்ல விரும்பு கின்ற கதைகளை அணுகுவதற்கான நுண்ணறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ளேன் என்று நம்புகிறேன்.ஒரு நடிகையாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன் என்றாலும், திரைப்பட தயாரிப்பும் கற்றலின் ஒரு பகுதி என்றே நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளராக இருக்கும்போது, பட தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்தை பற்றியும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதில் நம்பவே முடியாத அளவுக்கு ஒரு திருப்தி இருக்கிறது. இங்கு ஒரு நடிகையாக இருந்து நான் கற்றுக்கொண்டதை விட, இந்த படத்தை தயாரித்ததன் மூலமாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இன்னும் கற்றுக்கொள்வதற்கும், பங்களிப்பதற்கும் நிறைய இருக்கின்றன. எனவே, நான் ஒரு குறிப்பிட்ட வகை படங்களுக்கு மட்டுமே என்னை கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நான் பரந்த அளவிலான கதைகளை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால், இயற்கையாகவே ஒரு பெண்ணாக எந்த வகையான கதைகளால் ஈர்க்கப்படுகிறேன், எந்த வகையான கதைகளை உருவாக்க விரும்புகிறேன் என்பதை எனது அனுபவ பார்வையின் மூலம் தீர்மானிப்பேன். இவர் அவர் தெரிவித்தார்