மும்பை: அபிஷேக்கை பிரிகிறேனா? ஒரே பதிவில் தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐஸ்வர்யா ராய் லேட்டஸ்ட் குடும்ப போட்டோவை வெளியிட்டு அனைவரையும் வாயடைத்து விட்டார்.
பாலிவுட் திரையுலகின் முன்ணணி நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய். இவர்களது காதல் கதை ஒரு சினிமா படத்தைப் போலவே சுவாரசியமானது.
இந்தியாவில் உலக அழகி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவபர் ஐஸ்வர்யா ராய் தான். ‘தாய் அக்ஷர் பிரேம் கே’ (Dhaai Akshar Prem Ke) திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இடையே நட்பு உருவானது.
பின்னர் ‘குச் நா கஹோ’ (Kuch Naa Kaho) படத்தில் இணைந்து பணியாற்றியபோது அந்த நட்பு மேலும் நெருக்கமானது. இறுதியாக, ‘உம்ராவ் ஜான்’ (Umrao Jaan) படப்பிடிப்பு தளத்தில் இவர்களது நட்பு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் இணைந்து ‘பண்டி அவுர் பப்ளி’, ‘குரு’, ‘தூம்-2’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு, 2011-ல் ஆராத்யா என்ற மகள் பிறந்தார். சமீபகாலமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின.
இதனிடையே, சமீபத்தில் அபிஷேக் பச்சனின் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ராய் பதிவிட்ட வாழ்த்துச் செய்தி, அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “அன்பு பேபி பாப்பா 50-வது பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு மிகுந்த அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். அன்பில் என்றும் ஜொலியுங்கள்…” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். இதற்குப் பல ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திரைத்துறை வேலைகளுக்கு மத்தியிலும், தனது மகள் ஆராத்யாவிற்கு நேரம் ஒதுக்குவதில் ஐஸ்வர்யா ராய் மிகவும் கவனமாக இருப்பார். பொது நிகழ்ச்சிகளிலும் விமான நிலையங்களிலும் தனது தாயின் கையைப் பிடித்துக்கொண்டு வரும் ஆராத்யாவின் புகைப்படங்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். குடும்பத்தின் மீதான பற்று மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு என இருவரிடமும் காணப்படும் ஒற்றுமைதான் இவர்களை ரசிகர்களுக்குப் பிடித்தமான ஜோடியாக மாற்றியுள்ளது.