சென்னை: அஜித்தை வைத்து பாகுபலி போல் படம் பண்ணுவதாக முடிவு செய்ததாகவும், ஆனால், அப்படம் திடீரென கைவிடப்பட்டு விட்டதாகவும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் விடாமுயற்சி படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் குட் பேட் அக்லி அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணுவர்தன். பில்லா, ஆரம்பம் என இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் அஜித்தை வைத்து பாகுபலி போல் படம் பண்ணுவதாக முடிவு செய்ததாகவும், ஆனால், அப்படம் திடீரென கைவிடப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.