தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மூலம் பெரிய வெற்றியை பெற்றார். இப்படம் வசூலில் சிறப்பாக விளங்கி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் சினிமாவைத் தாண்டியும், கார் பந்தயங்கள் போன்ற துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

அவரது கலைத்துறையில் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது அண்மையில் வழங்கப்பட்டது. அதைத் பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய அஜித், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆங்கில ஊடகத்துக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் அவர் தனது வாழ்க்கையும், திரையுலகப் பயணமும் குறித்த பல விஷயங்களை திறமையாக பகிர்ந்துள்ளார்.
“நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டுமா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அஜித், “நான் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்க முனைந்ததற்குக் காரணம், அதற்கு முந்தைய சில படங்கள் எனக்கே ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தின. பெண்களை ஸ்டாக்கிங் செய்வதைப் போன்று சில காட்சிகள் இருந்ததை உணர்ந்தேன். மக்கள் திரையில் காண்பதை உண்மையில் பின்பற்ற முயல்கிறார்கள் என்பதால், அந்த உணர்வில் இருந்து வந்த பிரதிசெயலாகவே அந்தப் படத்தில் நடித்தேன்” என்று கூறினார்.