சென்னை: ஜனநாயகன் தணிக்கை விவகாரம் முடிவுக்கு வந்து விடும் என்று புது தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஜனநாயகன்.” கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில், தணிக்கை சான்று கிடைக்காததால், திரைப்படம் வெளியாகாமல் உள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு இருப்பதாக இன்று காலை முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக படத்திற்கு விரைவில் தணிக்கை சான்று கிடைத்துவிடும் என்றும் இதைத் தொடர்ந்து படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தணிக்கை குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஒட்டுமொத்த தணிக்கை வழிமுறைகள் ரகசியமாக நடைபெறும் என கூறியிருக்கிறார். இதேபோல் தயாரிப்பு நிறுவனமும் தணிக்கை சான்று கிடைக்கும் வரை அமைதி காக்கும் என்று தெரிகிறது.
அந்த வகையில், தற்போது வரை ஜனநாயகன் விவகாரம் தொடர்பான வழக்கை படத்தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறவில்லை. மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவோ அல்லது வழக்கை திரும்பப்பெறவோ இல்லை. ஜனநாயகன் விவகாரம் குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாததும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனினும், ஜனநாயகன் தொடர்பாக சாதகமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.