ஹைதராபாத் : அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை, தவறான செய்திகயை பரப்பாதீர்கள்: மற்றபடி எங்களது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பிரபல பாடகி கல்பனாவின் மகள் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள கல்பனா, ஹைதராபாத்தில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தனது தாய் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்று கல்பனாவின் மகள் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தின் நிஜாம்பேட் பகுதியில் வசித்து வருகிறார் பிரபல பின்னணி பாடகி கல்பனா. இவர் இரண்டு நாட்களாகவே வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்துள்ளனர். இருப்பினும், அவர் போனை எடுக்கவில்லை.
வெகுநேரமாக கதவு திறக்கப்படாமல் உள்ளதால், அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில், காவல் துறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கல்பனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரியவந்தநிலையில், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கல்பனாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், கல்பனாவின் மகள் செய்தியாளர்களை சந்தித்து, இது தற்கொலை முயற்சி இல்லை என கூறியுள்ளார்.
அதில், “ நான் கல்பனாவின் மகள், அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய தாய் தந்தை இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். மன அழுத்தம் காரணமாக அம்மா, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் அவர் எடுத்துக்கொண்ட மாத்திரையில் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை, தவறான செய்திகயை பரப்பாதீர்கள்: மற்றபடி எங்களது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
என் அம்மா, நான் மற்றும் என் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள், அது சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அம்மா அப்போது நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.