சென்னை: பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்தி, தமிழ், தெலுங்கு, நேபாளி, பஞ்சாபி, துளு மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது X பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அந்த பதிவில், “ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு… கடந்த 13-ம் தேதி முதல் எனது எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
அதை சரிசெய்ய X குழுவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் தானியங்கி பதில்களைத் தவிர, எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது கணக்கை நீக்கவோ அல்லது உள்நுழையவோ முடியவில்லை. “எனவே எனது X பக்கத்தில் வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். அதே நேரத்தில், அந்தப் பக்கத்தில் இருந்து வரும் எந்தத் தகவலையும் நம்ப வேண்டாம். அத்தகைய தகவல்கள் அனைத்தும் போலியான மற்றும் மோசடியான செய்திகளாக இருக்கலாம். கணக்கை மீட்டெடுத்தவுடன் உடனடியாக வீடியோ மூலம் உங்களுக்குத் தெரிவிப்பேன்” என்று அலர்ட் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது ரசிகர்கள் கவலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.