சென்னை: 3 வாரங்களுக்கு முன்பு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தனது எக்ஸ் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கு சில நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். விளம்பரம் எக்ஸ் தளத்தில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்ட குஷ்புவால் கடந்த மூன்று வாரங்களாக அதில் எதையும் பதிவிட முடியவில்லை. இந்த சூழ்நிலையில், குஷ்பு தற்போது தனது எக்ஸ் பக்கம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில், “3 வாரங்களுக்குப் பிறகு நான் ஒருவழியாக வந்துவிட்டேன். உங்கள் அனைவரையும் நான் மிஸ் செய்தேன். இந்த 3 வாரங்களில் நிறைய நடந்துள்ளது. மீண்டும் ஒன்றாக முன்னேறுவோம். கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களிடமிருந்து நிறைய கேட்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் என் அன்பு” என்று தெரிவித்துள்ளார்.