சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் மே 1 அன்று தொழிலாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் 44வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் திரைப்படமான இதில் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘ரெட்ரோ’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. கோடை விடுமுறையை ஒட்டி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ரெட்ரோ படம் மே 1 அன்று தொழிலாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கங்குவா படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும், ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அடுத்ததாக சூர்யா 45 படம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதற்கு பேட்டைக்காரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.