ஐதராபாத்: ஒரு நாளைக்கு ரூ.1.3 கோடி சம்பளம் வழங்குகிறோம் என்று கூறிய நிலையிலும் ராஜமவுலி பட வாய்ப்பை பிரபல பாலிவுட் நடிகர் நிராகரித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜமவுலி, மகேஷ் பாபுவை வைத்து “எஸ்.எஸ்.எம்.பி 29” படத்தை இயக்கி வருகிறார். ராஜமவுலி இயக்கி வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து “எஸ்.எஸ்.எம்.பி 29” படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்று ராஜமவுலி தெரிவித்திருக்கிறார். இப்படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது. இதில், மகேஷ் பாபுவுடன், பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதற்கிடையில், இப்படத்தில் மகேஷ்பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகரை படக்குழு அணுகி இருக்கிறது.
கதையை கேட்ட படேகர், தனது கதாபாத்திரம் மிகவும் சிறியதாகவும் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதாகவும் கூறி வாய்ப்பை மறுத்ததாக சொல்லப்படுகிறது. 15 நாட்கள் படப்பிடிப்புக்காக அவருக்கு சுமார் ரூ. 20 கோடி, கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு சுமார் ரூ. 1.3 கோடி சம்பளம் வழங்க படக்குழு தயாராக இருந்ததாகவும் தெரிகிறது.